கிளிநொச்சியில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (04-11-2022) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் அமைக்கப்படவுள்ள குறித்த குழு, போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம், குடும்ப வன்முறை, தற்கொலைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயற்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் உணவுப் பாதுகாப்பினையும் போஷாக்கினையும் உறுதிப்படுத்தும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணுவது தொடர்பாக ஆராயப்படடது.
மேலும் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாகக் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.