இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து

0

ர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

ஜொஹனஸ்பர்க்கை (Johannesburg) தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP), அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் ‘உலகளாவிய அதிகார வரையறை’ என்ற கோட்பாட்டின் கீழ் 60க்கும் மேற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவணங்களை சமர்பித்துள்ளது.

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆவணப்படுத்தி ஐக்கிய நடுபகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

புலனாய்வு அதிகாரிகள், தமிழ் துணை இராணுவக் குழுக்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட அரச அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

”பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல், சித்திரவதை, பலவிதமான பாலியல் வன்செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் உள்நாட்டுப் போர்க் காலம் மற்றும் அதற்கு பிந்தைய காலங்களில் இழைக்கப்பட்டன”.

ITJPஇன் இந்த அறிக்கையில் இலங்கையின் ஆட்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட வகையில் கணிசமான ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி ஆவணப்படுத்தியுள்ளது.

“மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை குறைத்து மதிப்பிட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறல் இடம்பெறுவதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தேவையற்ற வகையில் அளவுக்கு அதிகமான சட்ட வழிமுறைகளில் தலையீடுகளை உள்ளடக்கியிருந்தது”

அவர்களின் சமீபத்திய சமர்ப்பிப்பில், இலங்கையின் ஆட்சி மற்றும் பொது நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியாக உட்பொதிக்கப்பட்ட கணிசமான ஊழல்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

தமது ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர்கள் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தவர்கள், அவை போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட பாரிய சர்வதேச குற்றங்களாக கருதப்படலாம் என ITJP கூறுகிறது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் மற்றும் அரசின் பொது நிதி சூறையாடப்பட்டது ஆகியவை நாடு முழுவதிற்கும் மாபெரும் நிதியிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், அது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது எனவும் ITJP தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு படையினர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சில பொதுமக்கள் ஆகியோர் மட்டுமின்றி, இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) பல முன்னாள் அதிகார்கள் மீதும் பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ITJP அவர்கள் மீது சர்வதேச பயணத்தடையும் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த 1980களில், இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையின் அதிகாரிகள் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பரந்துபட்டளவில் அட்டூழியங்களை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படைகள் கடந்த 1987-89ஆம் ஆண்டுவரை இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அந்த படைகளை இலங்கைக்கு அனுப்பியதே, இந்தியா விடுதலையடைந்த பிறகு ஏற்பட்ட மிகப்பெரும் வெளியுறவு கொள்கை தோல்வியாக இன்றளவும் உள்ளது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி வலிந்து இந்த முன்னெடுப்பைச் செய்தார்.

இதற்கு தமிழ் மக்கள் முற்றும் எதிராக இருந்தாலும், இந்திய-இலங்கை உடன்பாடு என்ற பெயரிலான அமைதி உடன்படிக்கையை இந்தியா வலிந்து முன்னெடுத்து. அதில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்பட்டனர்.

‘இன்றுவரை எந்தவொரு குற்றவியல் பொறுப்புக்கூறல்களும் ஏற்படுத்தப்படாத நிலையில், கடந்தகால மற்றும் தற்போது நடைபெறும் குற்றச்செயல்களை தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி, சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு இயலுமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திக்கொள்வது மிக முக்கியமானதாகும்.

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து | Action Against Indian And Sri Lanka Army

 

இலங்கையில் போரின் முடிவின்போது போர்க்குற்றங்கள் புரிந்தார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினத்தன்று (டிசம்பர் 10) தடைகளை மேற்கொள்ளும் என நாம் நம்புகின்றோம்” என்று ITJPஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போது கூட்டுப்படைகளின் பிரதானியுமாக இருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது கடந்த 2021இல் ITJP தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரும் ஆவணம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

அதே போன்று கடந்த 2022ஆம் ஆண்டு மற்றொரு தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீதும் பிரித்தானிய அரசுக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை அளித்திருந்தது.

பிரித்தானிய அரசுக்கு அப்பாற்பட்டு அந்த ஆவணங்கள் கனடா, அவுஸ்திரேலிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது தடைகளை விதிக்குமாறு அந்த ஆவணத்தில் கோரப்பட்டிருந்தது.

இதே போன்று கடந்த 2020இல் ஷவேந்திர சில்வா பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக அமெரிக்க அரசு தனது தமது சட்டமூலம் 7031c இன் கீழ் அவருக்கு தடை விதித்தது. அதேவேளை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும்கூட, ஜகத் ஜயசூரியாவிற்கும் அமெரிக்க நுழைவனுமதி மறுக்கப்பட்டாகவும் நம்பப்படுகின்றது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்காக அனைத்துலக நீதி அதிகார வரையறையை ITJP பயன்படுத்தியுள்ளது. இலங்கையின் மிக மோசமான இராணுவ முகாம் என்று அறியப்பட்ட ’ஜோசப் முகாமில்’ ஜயசூரிய கொண்டிருந்த வகிபாகம் தொடர்பில் இச்சட்டத்தினைப் பயன்படுத்தி பிறேசிலிலும் சிலி நாட்டிலும் அவருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு வழக்குகள் ITJP தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவிலும் குற்றவியல் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் அவுஸ்ரேலிய மத்திய பொலிஸ் அதனை விசாரணை செய்யவில்லை.

2019ஆம் ஆண்டு சித்திரவதையால் பாதிக்கப்பட்டடோர் பாதுகாப்புச் சட்ட வழக்கொன்றும் குற்றவியல் வழக்கொன்றும் முன்னாள் ஜனாதிபதியும், போர்க் காலத்தில் அதிவல்லமை பொருந்திய பாதுகாப்புச் செயலராகவும் இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டது.

அதே போன்று 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் குற்றச்சாட்டு ஒன்று அளிக்கப்பட்டது. மேலும் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு எதிராக அனைத்துலக சட்ட அதிகார வரையறையின்கீழ் ஒரு நாட்டில் வழக்குத் தொடரப்பட்டு, அது இப்போது விசாரணையில் உள்ளது.

இவை தவிர, இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற வழக்குகளுடன் தொடர்புபட்ட இருவர் தொடர்பாக பிரித்தானிய மெற்ரோபொலிட்டன் பொலிஸாரிடம் பரிந்துரைக்கப்பட்டதுடன் இருவரையும் கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களிடமிருந்து மேலதிக தகவல்களையும் அண்மையில் கோரியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு வழக்கு பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பானது என அறியப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights