அதானி நிறுவனத்தால் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரியில் செயற்படுத்த முன்மொழியப்பட்ட 484 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த செய்திகள் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்துகின்றன என குறிப்பிட்டார்.
2025 ஜனவரி 2 ஆம் திகதி, இலங்கை அமைச்சரவை, 2024 மே மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை மறு மதிப்பீடு செய்யும் தீர்மானம், புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிலையான மறுஆய்வு செயல்முறை என்றும், நாட்டின் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுடன் இணக்கத்தை உறுதி செய்வதே இந்த மதிப்பாய்வின் நோக்கமாகும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் ரத்துச் செய்யப்படவில்லை என்பதை வலியுறுத்தும் அதானி குழுமம், இலங்கையின் பசுமை எரிசக்தித் துறையில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று (24) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சில இலங்கையில் அதானி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.