இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் ஏனைய காரணிகள் காரணமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட உத்தியோகபூர்வ விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்திய அரசாங்கத்தரப்பு இன்னும் இதனை உறுதிச்செய்யவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதன்போது இலங்கையில் சில அபிவிருத்தி திட்டங்களை அவர் ஆரம்பித்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் தற்போதைய உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்றொழிலாளரின் மரணச் சம்பவம் என்பவற்றை தொடர்ந்தே பிரதமரின் பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று அதிகாலை, இலங்கை கடற்படைக் கப்பலும் இந்திய கடற்றொழில் படகும் மோதியதில் ஒரு கடற்றொழிலாளர் உயிரிழந்தமை மற்றும் மற்றொருவர் காணாமல் போனது தொடர்பாக இலங்கையிடம், இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.