முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை – தியோநகர் கடற்கரைப்பகுதியை கனடா நாட்டினை சேர்ந்த தனியார் ஒருவர் உரிமை கோருவதால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சிலாவத்தை தெற்கு பகுதியில் உள்ள தியோநகர் என்ற கடற்கரையில் 2.5 கிலோமீற்றர் தூரத்தினை தனியார் கையகப்படுத்தியுள்ளதாலேயே அப்பகுதி கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு, சிலாவத்தை தெற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16ஆவது இறங்குதுறையாக சிலாவத்தை தெற்கு தியோநகர் இறங்குதுறை காணப்படுகின்றது.
இந்நிலையில், தியோநகர் கடற்கரையினையும் தனியார் சொந்தம் கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தியோநகர் கடற்கரையில் கடற்றொழிலாளர்கள் ஒரு சிறு கொட்டில் கூட போடமுடியாத நிலை காணப்படுகின்றது.
100 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் ஆழுகை செய்து வரும் கனடா நாட்டினை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் அங்கு இருப்பதே இந்நிலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது.