சிவில் உடையில் பொலிஸார் அடாவடித்தனம் ; உணவகத்திற்குள் புகுந்து தாக்குதல்

0

சிவில் உடை அணிந்திருந்த ஹட்டன் ​பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, உணவகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, உணவகத்தின் உரிமையாளரை அச்சுறுத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமை(10) அதிகாலை 1:00 மணியளவில், சிவில் உடை அணிந்திருந்த ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழு, உணவகத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு, உணவக உரிமையாளரைத் தாக்க முயன்று, உரிமையாளரின் சகோதரியை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் குறித்து ஹட்டன் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

பிலியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாடுவதற்காக உணவகத்திற்கு அருகில் ஒரு தனி மண்டபத்தையும், விதிமுறைகளின்படி உரிமம் பெற்ற உணவகத்தையும் நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதற்காக அனுமதி பெற்றதாகவும், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி நடைபெற்று வருவதாகவும், இறுதிப் போட்டி, திங்கட்கிழமை (09) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது , குடிபோதையில் , சிவில் உடையில் இருந்த ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழு, தனது உணவகத்திற்குள் நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டு, தனது சகோதரியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைத் தாக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

பின்னர் அவர் இந்த சம்பவம் குறித்து 119 பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், பொலிஸ் அதிகாரிகள் குழு வெளியேறிய பிறகு, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை(10) அன்று அதிகாலை 1:45 மணியளவில் தனது உணவகத்திற்கு வந்து சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு அதிகாரப்பூர்வ பணிக்காக பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறுவதாகக் கூறும் எந்த குறிப்பும் காவல் குறிப்பேட்டில் இல்லை என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights