அமெரிக்கா – புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மில்டன் புயலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.
மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.
அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.
இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு, இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் 90 நிமிடங்கள் நீடித்த சூறாவளியால் முக்கிய நகரங்கள் இதுவரை காணாத கனமழையை ஒரே நாளில் சந்தித்தன. இதனால் நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சூறாவளியின் போது ஒரே நாளில் 47 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
அனைத்து எரிபொருள் நிலையங்களும் எரிபொருளின்றி மூடப்பட்டுள்ளன. புளோரிடாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், 32 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மின்சார துறை தெரிவித்துள்ளது. சூறாவளியின் வேகம் மணிக்கு 135 கி.மீ., ஆக அதிகரித்து கேப் கெனவரல் வழியாக அட்லான்டிக் கடலுக்குள் நுழைந்தது.
சூறாவளி காரணமாக ஏற்பட்ட விபத்தில் புளோரிடாவில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி, ஹெலீன் புயல் தாக்கியமை குறிப்பிடத்தக்கது